செவ்வாய், 18 மே, 2010

கரையும் வைரம்

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்                                 (1302)

கணவன் மனைவிக்கிடையேயான ஊடல், உணவில் உப்பின் அளவாய் இருத்தல் வேண்டும். ஊடலை நீள விட்டால் அந்த உப்பு சிறிது மிகுந்து விட்டது போல் பயனற்று விடும் என்கிறார் வள்ளுவர்.

இதை படிக்கும் போதெல்லாம் மனதில் சில கேள்விகள் உருவாகின்றன. எதற்காக வள்ளுவர் இல்லற ஊடலின் அளவைக் குறிக்க உப்பை உதாரணம் காட்ட வேண்டும்? இனிப்பு, புளிப்பு என்று வேறு எந்தச் சுவையின் அளவு கூடினாலும் உணவு வீண்தானே? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணமிருக்குமா?

இந்தக் கேள்விகளுக்கான விடையை சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன். இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய சுவைகளின் அளவு கூடியிருந்தாலோ குறைந்திருந்தாலோ அதை அந்த உணவின் நிறம் ஓரளவு காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் உப்புச் சுவை அப்படியல்ல. அதன் அளவு எதுவாயிருந்தாலும் ஒருபோதும் எவர் கண்ணுக்கும் தெரிவதில்லை. பிறகு தான் புரிந்தது வள்ளுவரின் உப்பு உதாரணத்தின் நுட்பம்.

வள்ளுவர் புகழ் வாழ்க.

சந்தேகம் தீர்ந்து போனாலும் மனம் ஏனோ உப்புப் பற்றியே சிந்தித்துக் கிடந்தது. அன்றாட வாழ்வில் உப்பின் சிறப்பும் மதிப்பும் நம்மால் உணரப்படாமல் இருப்பது கவலை தருவதாயிருக்கிறது. வணிகப் பொருள், பிரதான உணவுப் பொருள் என்பதை மீறி உப்புப் பற்றி நான் படித்ததில் சில குறிப்புகள்.

- இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு எல்லாம் ஏதோவொரு காய்கனியில் இயற்கையாகவே உள்ளது. ஆனால் உப்புச் சுவை மனிதன் கண்டுப்பிடித்தது.

- உப்பை ஒரு ஆயுதமாக்கிய காந்தியின் போராட்டம் வெகு தனித்துவமானது. தண்டி கடற்கரையில் காந்திஜியின் நினைவு ஸ்தூபி ஒன்றுள்ளது. காந்தி பிறந்த நாளின் போது பலரும் அங்கே ஒரு பிடி உப்பைத் தங்களது அன்பின் அடையாளமாக வைத்துவிட்டு போகிறார்கள். எனவே

உப்பு ஒரு ஆயுதம்

உப்பு - அன்பின் வெளிப்பாடு

உப்பு ஒரு சரித்திரம்.

- மேலும் உப்பு சீனர்களுக்கு வெள்ளைத் தங்கம்

                                 வெள்ளையர்களுக்கு கரையும் வைரம்.

- இதைத் தவிர உப்பு - கண்ணீரின் சுவை

                                                கடலின் முணுமுணுப்பு.

- இன்னும் கவிதையாய் சொல்வதாயின் உப்பு சூரியனுக்கும் கடலுக்கும் பிறந்த குழந்தை.

***