மனது சோர்வுறும் தருணங்களில் என்னால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும் கவிதைப் புத்தகம் வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை. என் மனதிற்கு மிக நெருக்கமான கவிதைகள் கவிப்பேரரசினுடயதே. அவரது கவிதைக்கும் எனக்குமான உறவு காரணங்களால் விளக்க முடியாதது. பேச்சிலும் கவிதையிலும் அவரது கவித்துவமான, தனித்தன்மைமிக்க பார்வைகளை அறிந்திருக்கிறேன். எனக்கு அவர் எழுத்துக்களின் மீது உள்ளதை வெறும் ரசிப்பு என்று சொல்ல முடியாது. அர்ப்பணிப்பு, ஆராதனை, சரணாகதி இப்படி ஏதாவது சொல்லலாம். சில ஆண்டு காலம் தொடர்ந்து வைரமுத்துவின் படைப்புகளை வாசித்ததில் நான் அடைந்த மகிழ்வும் அகவெழுச்சியும் அளப்பரியது. தனிமை உணர்வை அவரது கவிதைகளைப்போல மிக நுட்பமாக வேறு எந்த கவிதையிலும் இதுவரை உணர்ந்ததில்லை.
கவிதைகளின் மிகப் பெரிய குணமாக நான் கருதுவது உலகத்தை அது வியக்க கற்றுத் தருகிறது. வியத்தல் ஒன்றுதான் அன்றாட வாழ்வின் மீது படிந்திருக்கும் சலிப்புகளை அகற்றுவதாய் திகழ்கிறது. அப்படிப்பட்ட வியக்க வைக்கும் கவிதை வரிகளை வழங்குவதில் வைரமுத்துவுக்கே முதலிடம் என் இதயத்தில்.
எனக்கு விருப்பமான வைரமுத்துவின் சில கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திரைப்படம்
இருட்டில் காட்டப் படுவதாய்
இருக்கட்டும்!
ஆனால் – அது
வாழ்க்கையின் வெளிச்சத்தில்
எடுக்கப்படட்டும்!
காதலரே காதலரே!
உங்களுக்கு உரைப்பதற்கு
ஒன்றுண்டு
கனவுப்பயிர் வளரும்
காதல் நிலத்தை
வினோபாவைப் போல்...
பிச்சை விருத்தாந்தத்தால்
பெறமுடியாது:
அது
மார்க்சின் தத்துவத்திற்கே
மசியும்.
காந்தி மகாத்மா
அப்படியொன்றும் உன்னை
அடியோடு மறக்கவில்லை
அண்ணலே!
இன்னும்
நகரத்து பெண்களிடம்
உனக்கு
நல்ல செல்வாக்கிருக்கிறது!
உன்னை பின்பற்றி
அரையாடை கட்டுவது
அவர்கள்தாம் இப்போது.
கோயில் செய்குவோம்
இன்னும் கொஞ்ச நாளில் –
அத்தனை சட்டசபைகளும்
ஆலயங்கள் ஆகலாம்!
அங்கும்...
செருப்போடு நுழைவது
தடை செய்யப்படலாம்.
காடு
குறிஞ்சியின் குழந்தை!
முடி வெட்டிக் கொள்ளாத
மூத்த பூங்கா!
ஆளுக்கொரு கோப்பை
தேநீர் பருகும் கணங்கள்
சில நிமிடத் திருவிழாக்கள்
பழைய மனைவியின்
முத்தம் போலொரு
சம்பிரதாயமல்ல தேநீர் பருகல்
ஒவ்வொரு மிடறும்
புதிய காதலியின் பசித்தமுத்தம்.
***
