வியாழன், 24 ஜூன், 2010

மீள முடியாத் துயரம்

       இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் ஒரு நாடு ஜெயிக்கும் ஒரு நாடு தோற்கும். ஆனால் எல்லா போரிலும் தோற்கடிக்கப்படுவது மக்கள்தான்.

       என் மனதில் சேமித்து வைத்திருக்கும் வரிகளில் ஆழ்ந்த வேதனையை உருவாக்கக்கூடிய வரிகள் இவை. போர் என்பது வெறும் சொல் அல்ல. அது ஒரு சிதைவியக்கம். மனித வாழ்வில் ஒரு போர் ஏற்படுத்தும் பாதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பயங்கரமானது. மீள முடியாத துயரத்திற்கு ஆளாக்கிவிடக்கூடியது. புகலிடம், அகதி முகாம், வீடு திரும்புதல், மறுவாழ்வு என்பதையெல்லாம் அனுபவித்துப் பார்த்தால்தான் அதன் நிஜமான வேதனை புரியக் கூடும். அப்படி ஒரு அசலான அனுபவத்தை தரும் திரைப்படம்தான் “The Pianist”. ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையில் போர் நிகழ்த்தும் பாதிப்பை மிகத் துல்லியமாக பதிவு செய்கிறது இந்த போலந்து நாட்டின் திரைப்படம். போரினால் ஏற்படும் ஒரு தனி மனித துயரத்தின் மீதான முழுமையான பார்வை. அதேப் போல் உயிரை இழக்கக் கூடிய கடுமையான போர்ச் சூழலில் மாட்டிக் கொண்ட போதும் கூட தன் மகனுக்கு சிறைக் கொடுமையோ, சாவதற்காகத் தாங்கள் கொண்டு வரப்பட்ட விஷயமோ தெரிந்து விடக்கூடாது என நகைச்சுவை உணர்வோடு போராடும் ஒரு நேசமிக்க தந்தையின் சாமர்த்தியமே “Life is Beautiful” எனும் இத்தாலிய நாட்டுத் திரைப்படம். யாவராலும் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய திரைப்படங்கள் இவை.

        யுத்தம் நின்றாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அதன் தழும்புகளும் ஒருபோதும் அழிவதே இல்லை. அது தலைமுறைகளைத் துரத்திக்கொண்டே இருக்கும் துர்கனவு. இலங்கைத் தமிழ் மக்கள் அதன் வேதனையை முழுமையாக அறிந்தவர்கள். இலங்கையில் நடந்த யுத்தத்தை வெறும் செய்தியாகவும் அதனால் நிகழ்ந்த மரணங்களை வெறும் புள்ளி விபரமாகவும் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அதன் உண்மையான வலியை ஓரளவாவது புரிந்து கொள்ள கற்றுக் தந்தது இந்தத் திரைப்படங்கள்தான்.

***

திங்கள், 21 ஜூன், 2010

ஒரு குறுஞ்செய்தி

    
    எனக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் யாவும் யாரோ எழுதி பரிமாற்றம் செய்யப்படும் நகல்களாகவே இருக்கின்றன. ஆனபோதும் அவற்றின் மீது அலட்சியம் காட்ட மனது ப்ரியப்பட்டதேயில்லை. மாறாக ஒரு தனிக் கவனத்தோடுதான் வாசித்து வருகிறேன். காரணம் அதில் அடுத்தவர் மீதான ஒரு சிறு அக்கறையும் எதையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற மனதும் ஒளிந்திருக்கிறது.

      பல மாதங்களுக்கு முன்னால் ஒரு விடுமுறை நாளின் மதிய நேரத்தில் அப்படி வந்த குறுஞ்செய்தி ஒன்று என்னை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த ஒன்றுதான் என்றாலும் அதுப்பற்றி முன் எப்போதும் தீவிரமாக யோசித்ததேயில்லை.

செருப்பில்லையே என்று கவலைப்படுகிறவன்

காலில்லாதவனைப் பார்த்து

ஆறுதல் அடையவேண்டும் என்று

அக்குறுஞ்செய்தி சொல்லியது.

   செருப்பில்லாதவனுக்குக் காலில்லாதவனைப் பார்த்தால் ஆறுதல் கிடைக்குமெனில் காலில்லாதவன் ஆறுதல் அடைய யாரைப் பார்க்க வேண்டும்? செருப்பில்லையே என்று வருந்துகிறவன் சம்பாதித்து செருப்பு வாங்க முயல வேண்டுமே தவிர காலில்லாதவனைத் தேடி ஏன் அலைய வேண்டும்? மேலும் காலில்லாதவனைப் பார்த்து ஆறுதல் அடைவது எத்தனை குரூரமானது?

     தாழ்ந்தவர்களைப் பார்த்து ஆறுதல் அடையும் மனது நிச்சயம் உயர்ந்தவர்களைப் பார்த்து பொறாமையும் படச்செய்யும். விளைவு நிம்மதியின்மை. எனவே என் வரையில் இரண்டுமே தவறானதாகத் தெரிகிறது.

உனக்கும் கீழே

உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து

நிம்மதி நாடு...

        என்ற கண்ணதாசனின் வரிகள் உங்களுக்கு பிடிக்குமா? எனக்கு அந்த  வரிகள் பிடிக்காமல் போகத் துவங்கிய நாள் அன்றுதான்.

***