பள்ளி முடித்து
வீடு வந்த நிலாஞ்சலி
விடாது நச்சரித்துக்கொண்டிருந்தாள்
நடக்கும்போது ஓசையெழுப்பும்
ஒரு ஜோடி காலணி கேட்டு.
இரண்டொரு நாளில்
வாங்கித் தருவதாய் சொன்னேன்.
அதுவரை அதிகாலை முத்தம்
ரத்தென்று சொன்னாள்.
அவள் முத்தமில்லா நாளின்
வெறுமைக்கு அஞ்சி
அன்று மாலையே கூட்டிச் சென்றேன் - ஒரு
மியாமி கடைக்கு.
ஏற்கனவே தேர்வு செய்து
வைத்திருந்தவள் போல
தாமதம் ஏதுமின்றி
தன் கால்களை பொருத்திக் கொண்டாள் – ஒரு
ரோஸ் நிற காலணியில் – அப்போது
அதன் நிறம் அவள் முகத்திலும்
வழிந்தது.
கடைக்காரர் நடந்து பார்க்கச்
சொன்னதும்
ரோஜா மகளின் பிஞ்சு நடையில் – ஒரு
ப்யானோ இசை கசியத் துவங்கியது...
***
