செவ்வாய், 4 அக்டோபர், 2011

பாடல் தரும் பரிசு

ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை படத்திலுள்ள கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல... என்ற பாடலை தொலைக்காட்சியில் தற்செயலாக பார்க்க நேரிட்டது. மெல்லிசை மன்னர்கள் இசையில் கண்ணதாசன் எழுதி பி. சுசீலா பாடிய பாடலது. என்னை ஈர்த்த ஈஸ்ட்மேன் கலர் காதல் பாடல்களில் மிகவும் பரவசப்படுத்தக் கூடியது. நெற்றிக்குள் உண்டான நெருக்கடிகளை தீர்த்து வைக்கும் ஒரு மாயாஜாலப் பாடல் என்று கூட சொல்லலாம்.

காதல் வந்த ஒரு பெண்ணின் மனதில் தோன்றும் ஆசை, வெட்கம், அச்சம் என்ற பெண்மையின் அடையாளங்களை இப்பாடலில் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பார் நாயகி ஜெயலலிதா. ஒரு கஸ்தூரிமான் ரோஸ் நிற புடவை கட்டிக்கொண்டு கனகாம்பரப்பூவையும் சூடி இயற்கை எழில் பொங்கும் ஒரு மலைச் சரிவில் தன்னை மறந்து துள்ளித் துள்ளி அங்குமிங்கும் ஓடுயாடுவது போலவே இருக்கும் அவரது நடனம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வண்ணம் அத்தனை அழகியலோடு படமாக்கப்பட்டிருப்பதுதான் இந்தப் பாடலின் தனித்துவம்.

பாடலின் வரிகள் எளிமையாக அதே நேரம் பெண்மை ததும்பும் ஒரு மகத்துவத் தன்மையில் இருக்கிறது..

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்

அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்

ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்

அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்

என்ற வரிகளில் பண்பாட்டின் அடிப்படையில் ஒரு பெண்ணின் உள்ளார்ந்த காதல் வெளிப்படுகிறது. அதை இன்றைய பெண்களிடம் எதிர்பார்க்கும் தகுதியை பெரும்பாலான ஆண்கள் இழந்து விட்டார்கள்.

அன்றாட வாழ்க்கை அர்த்தமற்று சலிப்பாகத் தோன்றும் வேளையில் அதை சுவாரஸ்யப்படுத்திக் கொள்ள இது போன்ற பாடலும் நடனமும் தேவைப்படுகிறது என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது என்று நினைக்கிறேன்.

வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து சற்றே விடுபடுவதற்கு என் போன்ற எளிய மனிதற்கு விருப்பமான சினிமாப் பாடல்களை முணுமுணுப்பதைத் தவிர வேறு எளிய வழியேது.

***

புதன், 24 ஆகஸ்ட், 2011

தர்மத்தின் அம்சம்

என் வரையிலான மகாபாரத வாசிப்பு ஆழமற்றதுதான் என்றாலும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அது என்னைமீறிய ஈர்ப்பில் அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. பின்னால் போவதன் மயக்கம் தீரவேயில்லை. மகாபாரதத்தில் என் பெருவிருப்பத்துக்குரிய கதாபாத்திரம் விதுரன் தான். விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், பாசாங்கற்ற பார்வையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் அவனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வேறு யாருமில்லை. பணிப்பெண்ணிற்கு மகனாக பிறந்ததால் அவனடைந்த அவமானங்கள் அநேகம். அவனது பால்யம் புறக்கணிப்புகளால் மட்டுமே நிரம்பியது. இருப்பினும் தனக்கு ஏற்பட்ட அவமானம் அத்தனையும் சகித்துக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் நல்லதை மட்டுமே நினைத்த ஒரே ஆள். அவன் தர்மத்தின் ஒட்டு மொத்த அம்சம்.


போரினைத் தவிர்க்க தான் மேற்கொண்ட தூது முயற்சிகள் யாவும் தோற்றுப் போனதில் தனது உறக்கமின்மையை விதுரனிடம் சொல்லிப் புலம்புகிறான் திருதராஷ்டிரன். அப்போது விதுரன் எடுத்துரைக்கும் யாவும் கிருஷ்ணனின் கீதைக்கு நிகரானது. பொருளை பறிகொடுத்தவன், காமத்தோடு இருப்பவன், திருடன் ஆகியோருக்கும் மற்றும் வலிமையற்றவன் வலிமை மிகுந்த சான்றோர்களை எதிர் கொள்ளும் போதும் உறக்கம் சாத்தியமற்றுப் போகும். இதில் நீங்கள் எந்த வகையில் துன்பப்படுகிறீர்கள் எனக் கேட்பான் விதுரன். மேலும் இரவில் நிம்மதியாய் உறங்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கவைகளை பகலிலேயே செய்து விடவேண்டுமென்பான். பதிலற்றுப் போவான் திருதராஷ்டிரன்.


அகந்தை, சுயநலம், நம்பிக்கைத் துரோகம், மாபாதகம், பெருங்கோபம், அதிகப்படியான பேச்சு ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள் என்பது விதுரனின் வார்த்தைகள் மட்டுமல்ல வாழ்வு முறையும் தான். அவனது அரசியல் பார்வைகளனைத்தும் அப்பழுக்கற்றது. யாரும் ஒருத்துளி களங்கம் காணமுடியாதபடி பொதுவான யுத்த நியதிகளை ஏற்படுத்தியது விதுரனின் தனிப்பெரும் அரசியல் ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் போரில் சிறிதளவும் விருப்பமின்றி யார் பக்கமும் வில்லேந்தப் போவதில்லை என்று தன் பேச்சைக் கூட ஒடுக்கிகொண்டு துறவறம் போனவன். சொல்லப் போனால் மகாபாரதத்திற்கே உப்பாயிருந்தவன் விதுரன்தான். விதுரனின் வாதங்கள் யாவும் வாழ்வியல் பாடம்.

 
சாணக்கியன் பேசப்பட்டது மாதிரி அரசியல் பேசும் போது யாரும் விதுரனை மேற்கோள் காட்டாதது ஏனென்று புரியவேயில்லை.



***

சனி, 6 ஆகஸ்ட், 2011

The Unknown Citizen


சமீபத்தில் வாசித்த கவிதைகளில் W.H. Auden ன் “The Unknown Citizen” மிகவும் பிடித்திருந்தது.  பிடித்திருந்தது என்பதை விட என்னை பெரிதும் சிந்திக்கச் செய்தது என்பதே உண்மை.   ஒரு காலை நேரத் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப வீரபாண்டியன் பரிந்துரைத்திருந்தார்.  கவிதையில் வரிவிடாமல் புகழ்ந்துத்தள்ளி ஒரு சாமான்ய மனிதனை கடுமையாக விமர்சித்திருப்பார் கவிஞர்.  உலகம் அறிந்து கொள்ளத் தவறிப் போன குடிமகன் என்பதைத் தாண்டி அறிந்து கொள்ள அவசியமற்ற குடிமகன் எனும் பொருளில் அமைந்திருக்கும். கவிதையை முழுவதும் உள்வாங்கிக் கொண்ட பிறகே தலைப்பின் நுட்பத்தை உணரமுடியம்.  தொடக்கத்தில் இக்கவிதையின் கதாபாத்திரத்தின் மீதுருவாகும் அபிமானம் சிறுகச் சிறுக குறைந்து முடிவில் முற்றிலும் வெறுக்கும் படியாக உருமாறிவிடும். ஆனாலும் கவிஞரின் பாராட்டுதல்கள் தொடர்ந்தபடியே இருக்கும். பகடிக்கவிதைகளில் ஆகச் சிறந்ததிது.  எல்லோரும் கட்டாயம் உள்வாங்கிக்கொள்ள வேண்டிய கவிதையும் கூட.

சமூக அக்கறையில்லாது வாழும் வாழ்வு எத்தகையதானாலும் அத்தனையும் பாழ் என்பதே கவிதையின் சாரம்.  கண்முன்னே என்வாழ்வும் பாழாகிக் கொண்டிருக்கிறதென்பதை எஞ்ஞான்றும் மறுப்பதற்கில்லை.      

"The Unknown Citizen"
He was found by the Bureau of Statistics to be
One against whom there was no official complaint,
And all the reports on his conduct agree
That, in the modern sense of an old-fashioned word, he was a saint
For in everything he did he served the Greater Community.
Except for the War till the day he retired
He worked in a factory and never got fired,
But satisfied his employers, Fudge Motors Inc.
Yet he wasn't a scab or odd in his views,
For his Union reports that he paid his dues,
(Our report on his Union shows it was sound)
And our Social Psychology workers found
That he was Popular with his mates and liked to drink.
The Press are convinced that he bought a Paper every day
And that his reactions to advertisements were normal in every way.
Policies taken out in his name prove that he was fully insured
And his Health-card shows he was once in a hospital but left it cured,
Both Producers Research and High-Grade Living declare
He was fully sensible to the advantages of the Installment Plan
And had everything necessary to the Modern Man,
A phonograph, a radio, a car and a frigidaire.
Our researchers into Public Opinion are content
That he held the proper opinions for the time of year;
When there was peace he was for peace when there was war he went.
He was married and added five children to the population,
Which our Eugenist says was the right number for a parent of his generation,
And our teachers report that he never interfered with their education.
Was he free? Was he Happy? The question is absurd:
Had anything been wrong, we should certainly have heard.
                               - W. H. Auden





புதன், 13 ஜூலை, 2011

டைரிக் குறிப்புகள்

டைரி எழுதும் பழக்கம் என்னிடம் இல்லையென்ற போதும் எழுத வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் துளிர் விட்டபடியே உள்ளது. டைரி எழுதுவதென்பது ஒரு தனி மனித தினசரி வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை அல்லது முக்கியமெனத் தோன்றும் சில நினைவுகளை உயிர்ப்புடன் ஒளிவு மறைவின்றி தன் கையெழுத்தில் பதிதலே ஆகும். அப்படி எழுதப் படும் டைரிகளில் தான் வாழ்வின் சுவடுகள் பதிந்திருக்கும். உட்கார்ந்துகொண்டு ஒரு நாளின் நினைவுகளை நினைவு படுத்தி எழுதுவதும் யோகப்பயிற்சிதான். எழுதுவதைவிட எழுதியவற்றை திரும்ப படித்துப் பார்ப்பது மிகுந்த உற்சாகத்தை தரக்கூடியது. அது தன்னை தானறிந்து கொள்ளுதல் போலாகும். நமது எண்ணங்களை பிரதிபலித்து காட்டும் கண்ணாடி - டைரிகள்.

நவீன தமிழ் இலக்கியத்தின் பிரதான படைப்பாளியான ஜெயமோகனின் “தேவகி சித்தியின் டைரி” என்னை கலங்கடித்த சிறுகதைகளில் ஒன்று. தான் டைரி எழுதுவது வீட்டிற்கு தெரியவர, கணவன் உட்பட புகுந்த வீட்டிலுள்ள எவரும் படித்துவிடக் கூடாதென்பதற்காக அதை எரித்துவிட்டு தன் திருமண வாழ்வையே தொலைத்து நின்ற ஒரு பெண்ணின் அழுத்தம் தான் கதை. மனதில் பட்டதை தவிர அதில் தவறாக ஒன்றுமே எழுதவில்லை என்று தன் தாலி மீது சத்தியம் செய்தும் அவளை யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு அப்படி என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது என்று அவளை அடிக்கவும் செய்கிறான் அவளது கணவன். தனது அந்தரங்கத்தன்மை மதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறாள். கெஞ்சுகிறாள். அதற்காக போராடுகிறாள். முடிவில் தோற்றுப் போகிறாள். அதில் அப்படியென்ன அவள் எழுதிவைத்திருந்தாள் என்பதைவிட டைரியின் சுபாவமே ரகசியக்காப்புத்தன்மையோடு விளங்குவது தான் என்பது ஏன் ஒருவர்க்கும் தெரியாமல் போனது என்று யோசித்தபடியே இருக்கிறேன். மிகுந்த நெருக்கத்திற்குரியவரே ஆனாலும் எழுதியவர் அனுமதியின்றி ஒருவரது டைரியை இன்னொருவர் படிப்பது நியாயம் மீறிய செயலாகும். ஒரு வகை அத்துமீறல் என்று கூட சொல்லலாம்.

நிழல்கள் ஒளிந்து கொள்ள உடலைத் தவிர வேறிடமில்லை. அதுபோல் நினைவுகளை ஒளித்து வைக்க டைரியைப் போன்று வேறெதுமில்லை.

***



சனி, 30 ஏப்ரல், 2011

Sir Alfred Hitchcock

1963ல் வெளிவந்த Alfred Hitchcockன் The Birds திரைப்படம் கிராபிக்ஸ் மிரட்டல்களுக்கெல்லாம் முன்னோடி. மிகச் சிறந்த திரைப்படமும் கூட. மனிதர்கள் மீதான சாதாரணப் பறவைகளின் தன்னிச்சையான தாக்குதல்களைப் பற்றியது. அதற்கான காரணம் எளிய புரிதலுக்குரியதல்ல. முற்றிலும் உளவியல் சார்ந்தது. ஆனாலும் கூட படம் ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தப் படம் தந்த பிரமிப்பில் ஹிட்ச்காக்கின் மற்ற திரைப்படங்களையும் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து தினமொரு திரைப்படம் என பத்து ஹிட்ச்காக் படங்களை பார்த்து முடித்தேன்.

1. Psycho

2. Dial M for Murder

3. Notorious

4. Rear Window

5. The Wrong man

6. Rope

7. To catch a thief

8. Strangers on a train

9. Vertigo

10. North by northwest

இப்படங்களை ஒருசேரப் பார்க்கும் போது த்ரில்லர் படங்கள் பற்றி அதுவரை மனதில் இருந்த பிம்பங்கள் யாவும் உருமாறிப்போனது. அந்த பத்து இரவுகளிலும் நான் அடைந்த சிலிர்ப்பும் திகைப்பும் விவரிக்க முடியாதது. ஒருவிதமான அசைவற்றத்தன்மையை உருவாக்கிவிடக் கூடிய வல்லமை பெற்றவை என்றே சொல்லவேண்டும். ஒரு குற்றம் இழைக்கப்படும்போதோ அல்லது மறைக்கப்படும்போதோ குற்றவாளியின் மனவுலகம் எப்படியிருக்கும் என்பதை விவரிப்பதில் தான் சுவாரஸ்யம் கூட்டுவாரே தவிர ஹிட்ச்காக் ஒரு போதும் கொலைகளை சுவாரஸ்யப்படுத்துவதில்லை. அவரது பெரும்பாலான திரைப்படங்கள் நாவல்களை தழுவியதாகவே இருக்கிறது. எனினும் திரைக்கதையை உருவாக்குவதில் அவர் செய்த ஜாலம் அபாரமானது. காண்பவர் யாவரின் ஒருத்துளி கவனம் கூட படத்தைவிட்டு வெளியே சிதறாதபடி நூல் பிடித்தாற் போல் ஒருவிதமான புதிர் நிலையை நோக்கியே காட்சிகளை நகர்த்துவதில் அவருக்கு நிகர் அவரே.


மேலும் ஹிட்ச்காக் தனது திரைப்படங்களில் ஒரு சில வினாடியாவது தான் தலை காட்டி விட வேண்டும் என்பதில் உறுதி கொண்டவராய் இருந்திருக்கிறார். ஆனால் அவர் தோன்றும் காட்சிகள் யாவும், தனக்கும் அந்த திரைப்படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போலவே அமைக்கப்பட்டிருக்கும். யாரோ போலவே கடந்து விடுவார். ஒருவேளை அதற்கும் கூட அவரது முக்கிய கதாபாத்திரங்களின் மனோநிலை போலவே ஏதேனும் ஆழ்ந்த உட்பொருள் இருந்திருக்குமோ என்னவோ, யார் அறிவார்?

***

சனி, 5 மார்ச், 2011

மீசை முளைத்த ஆசைகள்

          நிறைய பேர் மீது எனக்கு பொறாமையுள்ளது. அதிலும் பாரதி மீது கொண்ட பொறாமை அளவில்லாதது, நரைத்து விடும் முன்பே மரித்துப் போனாலும் தமிழை தனக்கு கடன் பட வைத்த ஒரு மகாகவி. தான் கொண்ட திமிரை தானே ரசித்தவன் பாரதி. அவன் திமிர் அவன் மனசாட்சி. அது சுயநலமற்றது. முற்போக்கு சிந்தனைகளாலானது. சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. வணங்கும் தெய்வத்திடம் கூட தன் தேவைகளை திமிராய் கேட்டவன். பகைவனுக்கும் அருளச்சொன்னவன். சுதந்திர தாகத்தை தணித்தவன். காற்று வெளியினில் காதலை எண்ணிக் களித்தவன். சின்னஞ்சிறு பாப்பாக்களுக்கும் சிந்து படித்தவன். எவனொருவனும் பாரதி மீது ப்ரியம் கொள்ள இவைகளே போதுமானது.

          தொடர்ந்து சில நாட்களாக பாரதியின் சில பாடல்களை திரும்பத் திரும்ப வாசித்ததில் ஒரு விபரீத ஆசை முளைத்தது. என் ஆசைகள் சிலவற்றை அவன் போல் எழுதிப் பார்க்க வேண்டுமென்று.  ஏதோ எழுதியும் விட்டேன். அவ்வாசைகள் அனைத்தும் நிறைவேற்றப் பட முடியாததுதான். ஆனாலும் நிஜமானது.


வான்புகழ் கொண்ட வள்ளுவவரிகளை
வாழ்க்கைப்படுத்தவொரு ஆசை

தேன்தமிழிலக்கியக்கடலில் நானொரு
பெண்துணையோடு நல்ல நீச்சல் பழகவொரு ஆசை

பாரதித் திமிருடன் பாரினில் நடந்திட ஆசை

பார்வையில் படும் ஒரு யானையை இரு கையில்
தூக்கிவைத்து கொஞ்ச ஆசை

மழலையராடிடும் விளையாட்டில் கலந்து கொண்டு
துளி வெட்கமானமின்றி தோற்றுப்போகவொரு ஆசை

நெஞ்சில் வஞ்சங்கொண்டு நித்தம் பேசுமொரு கூட்டம்
நடுவில் நின்று யுத்தம் புரியவொரு ஆசை

பொய்யான நம்பிக்கையை பூமி தன்னில் ஒரு
பெரிய குழித்தோண்டி போட்டுப் புதைக்கவொரு ஆசை


பயிர்கள் வாடி நின்றால் மொத்த மேகத்தையும்
போட்டுப் பிழிந்தெடுத்து மழையை பொழிய வைக்க ஆசை

உள்ளம் சொல்லும் ஒரு உயரம் நோக்கிச் செல்ல
நோய்கள் ஏதுமில்லாவுடலை உறுதி செய்ய ஆசை


பின் குறிப்பு:  இதில் பிழையேதுமிருந்தால் பொறுத்தருள வேண்டாம்.

***

திங்கள், 14 பிப்ரவரி, 2011

பிஞ்சு நடை


பள்ளி முடித்து


வீடு வந்த நிலாஞ்சலி


விடாது நச்சரித்துக்கொண்டிருந்தாள்


நடக்கும்போது ஓசையெழுப்பும்


ஒரு ஜோடி காலணி கேட்டு.


இரண்டொரு நாளில்


வாங்கித் தருவதாய் சொன்னேன்.


அதுவரை அதிகாலை முத்தம்


ரத்தென்று சொன்னாள்.


அவள் முத்தமில்லா நாளின்


வெறுமைக்கு அஞ்சி


அன்று மாலையே கூட்டிச் சென்றேன் - ஒரு


மியாமி கடைக்கு.


ஏற்கனவே தேர்வு செய்து


வைத்திருந்தவள் போல


தாமதம் ஏதுமின்றி


தன் கால்களை பொருத்திக் கொண்டாள் – ஒரு


ரோஸ் நிற காலணியில் – அப்போது


அதன் நிறம் அவள் முகத்திலும்


வழிந்தது.


கடைக்காரர் நடந்து பார்க்கச்


சொன்னதும்


ரோஜா மகளின் பிஞ்சு நடையில் – ஒரு


ப்யானோ இசை கசியத் துவங்கியது...


***