உலகிலேயே எது மிக சுவாரஸ்யமானது என்ற கேள்விக்கு அடுத்தவரின் காதல் கதை என்றொரு பதில் இருக்கிறது. இதை படிக்கும் போதெல்லாம் இதழ்களின் ஓரம் ஒரு மெல்லிய புன்னகை மலர்வது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அந்த பதிலை மெய்ப்பிப்பதுபோல்தான் அமைகிறது பெருகி வரும் காதல் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதன் வெற்றியும். எத்தனையோ விதமான காதல் கதைகள் வந்திருந்த போதிலும் காதல் மீதான வசீகரம் மட்டும் துளியும் குறையவில்லை. அது காதலுக்கே உண்டான தனித்துவம்.
காதல் என்பது வெறும் பாலினக்கவர்ச்சி மட்டும்தானா? கண்ணியமான காதல் என்பதெல்லாம் காணாமல் போய்விட்டதா? பருவ வயதினரின் பொழுதுபோக்குகளில் ஒன்றா? அப்படியெல்லாம் இல்லையெனில் காதலித்தவர்களே தாமாக பிரிந்துவிடுவதும், அதே தீவிரத்துடன் அடுத்தடுத்த காதலில் விழுவதும் எப்படி? காதல் வாழ்வதற்கான மிக ஆதாரத் தேவையா? காதல் எண்ணிக்கையற்ற திருப்பங்களால் நிரம்பியிருப்பது ஏன்? எப்படி புரிந்து கொள்வது காதலை? இப்படி எண்ணற்ற கேள்விகளை யோசித்து யோசித்து மனதில் மிஞ்சியதெல்லாம் ஒருவித குழப்பம்தான். ஒரு வேளை புரிந்து கொள்ளப்பட முடியாமல் இருப்பதுதான் காதலின் சுபாவம் போலும் என்று மனது சுயசமாதானம் செய்துகொள்கிறது.
காதலை மையமாகக் கொண்டு வெளிவந்த சமீபகாலத் திரைப்படங்களில் மிக முக்கியமானதாக நான் கருதுவது ஜீவாவின் உன்னாலே உன்னாலே மற்றும் கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா. இன்றைக்கிருக்கும் காதலின் யதார்த்தத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் சித்தரித்த பதிவுகள். தேர்ந்த உளவியல் மருத்துவரைப் போல காதல் தரும் பரிதவிப்பையும் காதலர்களின் மனப் பிரச்சனைகளையும் நுண்மையாக ஆய்வு செய்கிறது. வெளிப்படுத்த முடியாத வலியோடு இத்திரைப்படங்கள் முடிவுற்றாலும் அது ஒரு சுகானுபவமாகவே இருக்கிறது.
இன்றைய காதலர்களின் மனக் குழப்பத்தை சினேகனின் இந்தச் சின்னதொரு கவிதை அழகாய் வெளிப்படுத்துகிறது.
எதுவுமே தெரியாமல்
உன்னை காதலித்தேன்
எல்லாம்
தெரிந்த பின்பு
உன்னை
நான் பிரிந்தேன்
எது தவறு?
எது சரி?
***
