வெள்ளி, 14 மே, 2010

காதலின் சுபாவம்

உலகிலேயே எது மிக சுவாரஸ்யமானது என்ற கேள்விக்கு அடுத்தவரின் காதல் கதை என்றொரு பதில் இருக்கிறது. இதை படிக்கும் போதெல்லாம் இதழ்களின் ஓரம் ஒரு மெல்லிய புன்னகை மலர்வது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அந்த பதிலை மெய்ப்பிப்பதுபோல்தான் அமைகிறது பெருகி வரும் காதல் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதன் வெற்றியும். எத்தனையோ விதமான காதல் கதைகள் வந்திருந்த போதிலும் காதல் மீதான வசீகரம் மட்டும் துளியும் குறையவில்லை. அது காதலுக்கே உண்டான தனித்துவம்.


காதல் என்பது வெறும் பாலினக்கவர்ச்சி மட்டும்தானா? கண்ணியமான காதல் என்பதெல்லாம் காணாமல் போய்விட்டதா? பருவ வயதினரின் பொழுதுபோக்குகளில் ஒன்றா? அப்படியெல்லாம் இல்லையெனில் காதலித்தவர்களே தாமாக பிரிந்துவிடுவதும், அதே தீவிரத்துடன் அடுத்தடுத்த காதலில் விழுவதும் எப்படி? காதல் வாழ்வதற்கான மிக ஆதாரத் தேவையா? காதல் எண்ணிக்கையற்ற திருப்பங்களால் நிரம்பியிருப்பது ஏன்? எப்படி புரிந்து கொள்வது காதலை? இப்படி எண்ணற்ற கேள்விகளை யோசித்து யோசித்து மனதில் மிஞ்சியதெல்லாம் ஒருவித குழப்பம்தான். ஒரு வேளை புரிந்து கொள்ளப்பட முடியாமல் இருப்பதுதான் காதலின் சுபாவம் போலும் என்று மனது சுயசமாதானம் செய்துகொள்கிறது.


காதலை மையமாகக் கொண்டு வெளிவந்த சமீபகாலத் திரைப்படங்களில் மிக முக்கியமானதாக நான் கருதுவது ஜீவாவின் உன்னாலே உன்னாலே மற்றும் கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா. இன்றைக்கிருக்கும் காதலின் யதார்த்தத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் சித்தரித்த பதிவுகள். தேர்ந்த உளவியல் மருத்துவரைப் போல காதல் தரும் பரிதவிப்பையும் காதலர்களின் மனப் பிரச்சனைகளையும் நுண்மையாக ஆய்வு செய்கிறது. வெளிப்படுத்த முடியாத வலியோடு இத்திரைப்படங்கள் முடிவுற்றாலும் அது ஒரு சுகானுபவமாகவே இருக்கிறது.


இன்றைய காதலர்களின் மனக் குழப்பத்தை சினேகனின் இந்தச் சின்னதொரு கவிதை அழகாய் வெளிப்படுத்துகிறது.

     எதுவுமே தெரியாமல்

     உன்னை காதலித்தேன்

     எல்லாம்

     தெரிந்த பின்பு

     உன்னை

     நான் பிரிந்தேன்

     எது தவறு?

     எது சரி?

***

செவ்வாய், 11 மே, 2010

பேசும் படங்கள்

Life is a tragedy when seen in close-up, but a comedy in long shot.

                                                           - Charles Spencer Chaplin

திரைப்படங்களில் இருந்து கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு முதலில் சாப்ளினின் படங்களை பாருங்கள் என்பதுதான் என் பதில். சார்லி சாப்ளின் வெறும் கோமாளியல்ல. காதலை பாடிய கவிஞன், அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்த ஒரு போராளி, வறுமையை கூட தன் நகைச்சுவை உணர்வால் விரட்டியடித்த ஒர் உயர்ந்த மனிதன். எந்த உறவிலும் சாய்ந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தோடு சுற்றித் திரியும் ஒரு நாடோடியாக வந்து நட்பையும், காதலையும், மனிதாபிமானத்தையும் திரையில் பதிவு செய்த ஓர் மாமேதை.


சாப்ளிளின் திரைப்படங்களில் என் நிரந்தர விருப்பத்திற்குரியது The Circus, City lights, The Kid ஆகியவை. இந்தப் படங்களை பார்த்து முடிக்கும் போது மனதுக்குள் ஏற்படும் அந்த உணர்வே ஒரு புது அனுபவமாக இருக்கும். இத்தனை பெரிய கால மாற்றத்தை கடந்து தனக்கென தனியான ரசிகர்களை கொண்டிருப்பது சாப்ளின் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் சாப்ளினின் பாதிப்பு இல்லாத நடிகர்களே சினிமா உலகில் இல்லை. இவரது நகைச்சுவையைப் பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அதேப் போல் துளிக் கண்ணீர் சிந்தாதவரும். காரணம் சாப்ளினின் நகைச்சுவை வலியில் இருந்து உருவாவது. சாப்ளினின் திரைப்படங்கள் வழியே வரும் சிரிப்பும் கண்ணீரும் உன்னதமானது. மொழியின்றி அவரது படங்கள் உணர்த்தும் பாடங்கள் ஏராளம். அவற்றை புரிந்துகொள்வதற்கும் வாழ்க்கைப்படுத்துவதற்கும் தேவையாய் இருப்பது மனதின் விருப்பம் மட்டுமே.


ஒரு முறை ஒரு பேட்டியில் நடிகர் விவேக் சொன்னது நினைவுக்கு வருகிறது.

City lights ன் க்ளைமாக்ஸ் காட்சியில் உங்களுக்கு கண்கள் பனித்து, உதடு துடித்து, மேனி சிலிர்த்து, தொண்டை அடைக்கவில்லை என்றால்... உடனே டாக்டரை பார்க்கவும்.

சத்தியமான வார்த்தைகள்.

***