சனி, 1 மே, 2010

இரவு எத்தனை அழகு

தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த நாட்களில் தான் இரவில் வானம் எத்தனை அழகு என்பதை தெரிந்து கொண்டேன். நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் வானத்தின் கீழ் படுத்துக்கொண்டு நண்பர்களோடு பேசிய கதைகளையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்கிறது. நண்பர்கள் யாவரும் உறங்கிய பிறகு நான் மட்டும் தூக்கத்தை புறக்கணித்துவிட்டு நட்சத்திரங்களையும், நிலவையும், வழித் தெரியாமல் அலையும் பறவைகளையும் பார்த்தபடி படுத்துக்கிடப்பேன். ஒவ்வொரு இரவும் தனக்கென தனியான அடர்த்தியும் நறுமணமும் கொண்டதாகவே இருக்கிறது. எதன் எதன் மீதோ எனக்கிருந்த கோபங்கள் யாவும் இரவின் மீது ஈர்ப்பாக மாறியது. ஏனோ ஆகாயமும், நட்சத்திரமும், நிலவும் திடீரென கைதொடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டது போலிருக்கும். வாய் தானறியாமல் ஏதேதோ பாடல்களை முணுமுணுக்கத் துவங்கும். இரவை ஒரு பழச் சாறு போல ருசியாக்கிக் கொண்டு பருகிக் கிடந்த நாட்கள் அவை. இன்று வரை அந்த இரவுகள் ஈரம் உலராமல் அப்படியே மனதில் இருக்கிறது. தஞ்சை வாசம் முடிந்து வீடு திரும்பிய பிறகு வானம் பார்த்து படுத்துறங்குவதற்கெல்லாம் ஏனோ மனமின்றி போனது.



தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்னால் ஓர் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மொட்டைமாடியில் சிறிது நேரம் படுக்க வேண்டியதாகியது. அது ஒரு பௌர்ணமி நாளாக இருந்த போதும் இரவையோ நிலவையோ துளி கூட ரசிக்காமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனாலும் நிலவு அதே அழகுடன் நிசப்தமாக வெகுதொலைவில் வானில் அலைந்து கொண்டிருந்தது.

***


புதன், 28 ஏப்ரல், 2010

கடவுளைத் தேடி

கடவுள் உண்டா? இல்லையா? இந்த விவாதம் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றும் முடிவின்றி தொடர்கிறது. காரணம் இரண்டுப் பக்கமும் பேச இடம் இருப்பதுதான். ஆத்திகர்களால் சந்தேகத்திற்கு இடமின்றி கடவுளை நிரூபிக்க முடியவில்லை. நாத்திகர்களாலும் இயற்கையின் இயக்கம் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. கடவுள் என்ற சொல் ஒரே நேரத்தில் சிலருக்கு பரவசத்தையும் சிலருக்கு பரிகாசத்தையும் தருவதாகயிருக்கிறது.


கடவுளின் இருப்புக் குறித்து தெளிவான பார்வை இல்லாதபோதும் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வருகிறேன். முன்பெல்லாம் கடவுள் இல்லை என்று தீவிரமாக மறுத்த வந்த நான் இப்போது கடவுள் உண்டா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்பதை ஒப்புக் கொள்ளுமளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறேன். இல்லை என்று சொல்வதன் மூலம் ஒன்றை மறைமுகமாக உண்டு என ஏற்றுக்கொள்வதாகவே ஒரு நினைப்பு. ஏனெனில் இருக்கும் ஒன்றைத் தானே இல்லை என்று சொல்ல முடியும். மேலும் மற்றவர்களின் அபிப்ராயங்களை வைத்துக் கொண்டு கடவுள் விஷயத்தில் முடிவெடுப்பதில் துளியும் விருப்பம் இல்லாமல் போனது. எனவே எனக்கு நானே கடவுளைத் தேடிப் பார்க்கத் துவங்கினேன். இன்று வரை என்னால் உணரப்படவில்லை. தன் அற்புதங்களை முற்றிலும் அடக்கிவைத்துக்கொண்டிருக்கும் கடவுளின் மீதான மனிதர்களின் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


வாழ்வில் எந்த பிடிமானமுமின்றி கலங்கிப் போய் நிற்கும் மனிதர்களுக்கு கோயில்களே புகலிடமாகவும் பிரார்த்தனைகளே பிடிமானமாகவும் உள்ளதை பார்க்கும் போது அது மூட நம்பிக்கையாய் இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும் என்றே மனது விரும்புகிறது. கடவுள் வழிபாட்டைவிடவும் முக்கியமானது சக மனிதனை மதிப்பதும், அவனை புரிந்து கொள்வதுமே ஆகும் என்ற வரிகள் மீது அதீத நம்பிக்கை கொண்டவன் நான்.

***