சிறுவயதிலிருந்தே கண்ணில் பட்ட எதையும் காகிதத்தில் வரைந்து விட வேண்டும் என்ற பேராசை இருந்து வருகிறது. படம் வரைதல் மீது எதற்காக இத்தனை ஆர்வம் வந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. முக்கியமாக மனித முகங்களை அசலாக வரைந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை தணியவேயில்லை. ஆனால் எனக்கிருக்கும் அந்த பேரார்வத்தின் விளைவாக இதுவரை ஒரு முகத்தை கூட உயிர்ப்புடன் வரைய இயலவில்லை. எவ்வித பயிற்சியும் இல்லாமல் ஒரு சித்திரக்காரன் ஆகிவிடுவது ஒன்றும் சாத்தியம் இல்லை என்பது என் மூளைக்கு தெரிந்தாலும் மனம் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. சுய முயற்சியால் ஒரு ஓவியன் ஆவதே என் வாழ்நாள் லட்சியம் என்றிருக்கிறேன். முகங்களின் பின் பகுதியை ஓரளவு வரைய கற்றுக் கொண்ட என் பேனா முன் பகுதியை வரைவதற்கு மட்டும் இன்னும் பழகவேயில்லை. உயிரோட்டமுள்ள ஓவியங்களை வெறும் பேனா கொண்டு வரைவது மிகவும் பெருமைக்குரியது. வழக்கமாக பருகும் தேநீர் கூட மழை பெய்யும் நேரத்தில் தனித்த ருசி கொண்டுவிடுவதைப் போல எப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் பேனா வரையத் துவங்கியதும் ஒரு தூரிகையாக மாறிவிடுவதை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். வண்ணம் தீட்டி பார்ப்பதை விடவும் படங்களை கறுப்பு வெள்ளையில் விட்டுவிடுவதற்கே மனது அதிக விருப்பம் கொள்கிறது.
சரியான கோடுகள் கொடுக்கப்படும் போது ஒரு ஓவியமும், சரியான வார்த்தைகள் வழங்கப்படும் போது எழுத்துப் படைப்பும் பூரணமாகின்றது. என் ஓவியமும் எழுத்தும் பூரணமாவது எப்போது?
வாழ்வில் பெரும்பாலான கேள்விகள் பதிலற்று இருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தான்.
என் வரைதலில் வீணான காகிதகங்களில் நாலைந்து மரங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம் என்பதுதான் மிகுந்த வேதனையாக இருக்கிறது.
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக