எனக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் யாவும் யாரோ எழுதி பரிமாற்றம் செய்யப்படும் நகல்களாகவே இருக்கின்றன. ஆனபோதும் அவற்றின் மீது அலட்சியம் காட்ட மனது ப்ரியப்பட்டதேயில்லை. மாறாக ஒரு தனிக் கவனத்தோடுதான் வாசித்து வருகிறேன். காரணம் அதில் அடுத்தவர் மீதான ஒரு சிறு அக்கறையும் எதையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற மனதும் ஒளிந்திருக்கிறது.
பல மாதங்களுக்கு முன்னால் ஒரு விடுமுறை நாளின் மதிய நேரத்தில் அப்படி வந்த குறுஞ்செய்தி ஒன்று என்னை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த ஒன்றுதான் என்றாலும் அதுப்பற்றி முன் எப்போதும் தீவிரமாக யோசித்ததேயில்லை.
செருப்பில்லையே என்று கவலைப்படுகிறவன்
காலில்லாதவனைப் பார்த்து
ஆறுதல் அடையவேண்டும் என்று
அக்குறுஞ்செய்தி சொல்லியது.
செருப்பில்லாதவனுக்குக் காலில்லாதவனைப் பார்த்தால் ஆறுதல் கிடைக்குமெனில் காலில்லாதவன் ஆறுதல் அடைய யாரைப் பார்க்க வேண்டும்? செருப்பில்லையே என்று வருந்துகிறவன் சம்பாதித்து செருப்பு வாங்க முயல வேண்டுமே தவிர காலில்லாதவனைத் தேடி ஏன் அலைய வேண்டும்? மேலும் காலில்லாதவனைப் பார்த்து ஆறுதல் அடைவது எத்தனை குரூரமானது?
தாழ்ந்தவர்களைப் பார்த்து ஆறுதல் அடையும் மனது நிச்சயம் உயர்ந்தவர்களைப் பார்த்து பொறாமையும் படச்செய்யும். விளைவு நிம்மதியின்மை. எனவே என் வரையில் இரண்டுமே தவறானதாகத் தெரிகிறது.
உனக்கும் கீழே
உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து
நிம்மதி நாடு...
என்ற கண்ணதாசனின் வரிகள் உங்களுக்கு பிடிக்குமா? எனக்கு அந்த வரிகள் பிடிக்காமல் போகத் துவங்கிய நாள் அன்றுதான்.
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக