செவ்வாய், 4 மே, 2010

நெஞ்சில் ஓர் ஆலயம்

தமிழ் சினிமாவின் சிறந்த பத்து திரைப்படங்களை தேர்வு செய்யச் சொன்னால் அதில் நிச்சயம் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” இடம் பெறும். மிக அற்புதமான ஒரு திரைப்படம். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களோடு சேர்ந்து தொலைக்காட்சியில் இந்தப் படத்தை முதல் முதலாக காணத் துவங்கினேன். ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்தோடு ஒன்றிப்போய் விட்டேன். என்னைத் தவிர யாவரும் உறங்கிவிட்டிருந்தார்கள். படம் முடியும் நேரத்தில் எழுந்து கொண்டவர்கள் கேட்டது என்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படி தான் இவன் ஆஸ்ப்பத்திரிலேயே எடுத்த படத்த தனியா உக்காந்து பாத்துக்கிட்டிருக்கானோ? பிறகு தான் புரிந்தது இதுவரை நான் பார்த்த மொத்த திரைக்கதையும் ஒரு மருத்துவமனைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறதென்று. ஆனால் அந்த நினைப்பே வராமல் துளித் தொய்வில்லாத திரைக்கதை என்னைத் திகைக்கச் செய்தது. வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட மருத்துவமனைக்கென்றே இருக்கிற தனியான வாசனையை உணரச் செய்வது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது படத்தின் காட்சிகள். நடிகர்களின் தேர்வும் பின்னணி இசையும் ஒப்பற்றது. இப்படத்தினை எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்கான காரணம் எளிமையான வசனங்களும் நுட்பமான திரைக்கதையும் தான். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் இது ஒரு காவியம் என்றே சொல்வேன்.

***

1 கருத்து: