சனி, 1 மே, 2010

இரவு எத்தனை அழகு

தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த நாட்களில் தான் இரவில் வானம் எத்தனை அழகு என்பதை தெரிந்து கொண்டேன். நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் வானத்தின் கீழ் படுத்துக்கொண்டு நண்பர்களோடு பேசிய கதைகளையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்கிறது. நண்பர்கள் யாவரும் உறங்கிய பிறகு நான் மட்டும் தூக்கத்தை புறக்கணித்துவிட்டு நட்சத்திரங்களையும், நிலவையும், வழித் தெரியாமல் அலையும் பறவைகளையும் பார்த்தபடி படுத்துக்கிடப்பேன். ஒவ்வொரு இரவும் தனக்கென தனியான அடர்த்தியும் நறுமணமும் கொண்டதாகவே இருக்கிறது. எதன் எதன் மீதோ எனக்கிருந்த கோபங்கள் யாவும் இரவின் மீது ஈர்ப்பாக மாறியது. ஏனோ ஆகாயமும், நட்சத்திரமும், நிலவும் திடீரென கைதொடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டது போலிருக்கும். வாய் தானறியாமல் ஏதேதோ பாடல்களை முணுமுணுக்கத் துவங்கும். இரவை ஒரு பழச் சாறு போல ருசியாக்கிக் கொண்டு பருகிக் கிடந்த நாட்கள் அவை. இன்று வரை அந்த இரவுகள் ஈரம் உலராமல் அப்படியே மனதில் இருக்கிறது. தஞ்சை வாசம் முடிந்து வீடு திரும்பிய பிறகு வானம் பார்த்து படுத்துறங்குவதற்கெல்லாம் ஏனோ மனமின்றி போனது.



தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்னால் ஓர் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மொட்டைமாடியில் சிறிது நேரம் படுக்க வேண்டியதாகியது. அது ஒரு பௌர்ணமி நாளாக இருந்த போதும் இரவையோ நிலவையோ துளி கூட ரசிக்காமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனாலும் நிலவு அதே அழகுடன் நிசப்தமாக வெகுதொலைவில் வானில் அலைந்து கொண்டிருந்தது.

***


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக