புதன், 2 ஜூன், 2010

கோபாலரத்னம் சுப்ரமணியம்

சமகால தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் என் அதிகபட்ச விருப்பத்துக்குரியவர் மணிரத்னம். இந்திய நவீன சினிமாவின் தனிப்பெரும் ஆளுமைமிக்கவர். அவர் மீது மிகுந்த மதிப்பும் வியப்பும் கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். நான் மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன். சினிமாக் கலையின் நுட்பங்களை ஒரு ஆசானைப் போல தன் திரைப்படங்களின் மூலம் கற்றுத் தருகிறார். குறிப்பாக அதன் ஒளிப்பதிவு, திரைக்கதை, வசனம், திரை இசை, நடிப்பு, சினிமா பார்வையாளர்கள் என்று தனித் தனியாக கவனம் கொண்டு ஆழ்ந்து செயல்படக் கூடியவர்.

அவரது திரைப்படங்களை பலமுறை பார்க்கும் பழக்கமுடையவன் நான். ஒவ்வொரு முறையும் அவை தரும் நெருக்கமும் அறிவும் சினிமாவை புரிந்து கொள்வதை மேம்படுத்துகிறது. தளபதி படத்தின் நிறம் தனித்துவமிக்கது. மௌன ராகத்தை எப்போது பார்க்க நேரிட்டாலும் ஏதோவொரு மாயம் படம் முடியும் வரை பார்க்கச் செய்து விடுகிறது. நாயகனைப் போல் வேறு எந்த திரைப்படமும் ஒரு தனி மனிதனின் சரிதத்தை பால்யத்தில் இருந்து முதுமை வரை இத்தனை நுட்பமாக சித்தரித்ததாய் தெரியவில்லை. அஞ்சலி படம் பார்த்த இரவு உறக்கமற்றது. தீவிரவாதப் பின்னணியில் ஒரு தேசாபிமானமிக்க காதல் கதையை இவரைத் தவிர யாராலும் அத்தனை நேர்த்தியாக இயக்க முடியாது. பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்கள் சமூகத்தின் அடையாளங்கள்.

மணிரத்னம் தனது படங்களின் எந்த ஒரு காட்சியையும் வெளிநாட்டில் படம் பிடிக்காதவர் என்பது இமாலய வியப்பிற்குரியது. மேலும் கைக்கடிகாரம் அணியாதவர். ஆனால் எப்போதும் ஒரு கடிகாரத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருப்பவர். ஆரம்ப நாள் முதல் இன்று வரை தனது படங்களின் மொத்த ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலால் எழுதி வருபவர். மழை மீதும் ரயில் மீதும் இயக்குனருக்கு அப்படி என்னதான் காதலோ எல்லா படங்களிலும் இடம் பெற்று விடுகின்றன.

மணிரத்னம் அதிகம் பேசுவதில்லை. அவருக்கும் சேர்த்து அவரது படைப்புகளே பேசுகின்றன. இன்று பிறந்த நாள் காணும் இயக்குனருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக