கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அதிசயமாக அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாகவே உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பிந்தைய இரவில் கூட மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த குளிர்மையான அதிகாலையிலும் தூக்கம் பிடிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் வெற்று யோசனைகளுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது சட்டென நினைவுக்கு வந்தது கர்ண மோட்சம். வெகு நாட்களாகவே பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த குறும்படம் அது. சிறந்த குறும்படத்திற்கான பல மாநில விருதுகளும் தேசிய விருதும் பெற்றது. இன்று எப்படியும் பார்த்தாக வேண்டும் என்ற ஆவலில் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து காணத் துவங்கினேன். விடிவதற்கு முன்பாக ஒரு படத்தை பார்ப்பது அதுவே முதல் முறை. தனித்த அனுபவமாக இருந்தது. பத்து நிமிடங்களே ஓடக்கூடிய படம் என்றாலும் அது ஏற்படுத்திய பாதிப்பு மனதை துவளச் செய்தது. கர்ண மகா ராஜா வேஷம் கட்டும் ஒரு கூத்துக் கலைஞனின் இன்றைய வாழ்வு நிலை பற்றிய அதிநுட்பமான பதிவு. இன்றைய நாகரிகமும் தொழில் நுட்ப வளர்ச்சியும் எத்தனை பேரின் வாழ்வாதாரத்தை பின்னோக்கி இழுத்து போகிறதோ எனும் கேள்வி காண்பவர் யாவர் மனதிலும் நிச்சயம் எழக்கூடும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிகப் புகழ் பெற்ற கலை வடிவமே தெருக் கூத்துதான். அந்தக் கலைஞர்களின் இன்றைய தினசரி வாழ்க்கைப்பாடு எத்தனை போராட்டமிக்கதாக ஆகிவிட்டதென்பதும் அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் எப்படி பழகிக் கொண்டுவிட்டார்கள் என்பதும் புரியத் துவங்கியது. ஜெயிக்கவும் முடியாமல் தமது கலையை கைவிட்டுத் திரும்பிச் செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்கள்தான் எத்தனை பேரோ? யோசிக்க யோசிக்க மனது எதைஎதையோ பின்னுகிறது.
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக