கடிதம் வெறும் பரிமாற்றம் இல்லை. நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. நேர் பேச்சில் சொல்ல முடியாததை எழுத்தில் சொல்ல முடியும். ஒரு வகையில் கடிதம் நம் மனதின் குரல். ஒவ்வொருவர் மனதிலும் எழுத நினைத்து எழுதாமல் போன கடிதங்கள் இருக்கின்றன. அது போலவே எழுதி முடித்து அனுப்பாமல் போன கடிதங்களும் ஒன்றிரண்டாவது நிச்சயம் இருக்கக்கூடும். அப்படி அனுப்பாத கடிதம் ஒன்று என்னிடமும் உள்ளது. அதுதான் நான் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எழுதிய இந்தக் கடிதம்.
அன்புள்ள ரஜினிகாந்த்,
என் வாழ்நாளில் எப்படியும் பார்த்தாகவேண்டும் என எழுதி வைத்திருக்கும் பெயர்களுள் உங்கள் பெயரும் ஒன்று.
உங்கள் மீது எனக்கு பற்றோ பக்தியோ இல்லை. மாறாக நான் கொண்டிருப்பதெல்லாம் ஒருவித ஈர்ப்பு. அதைத் தவிர வேறில்லை.
இன்று ஓரளவு விபரம் தெரிந்தும் கூட தரையில் கால் படாமல் திரையில் நீங்கள் சண்டை போடுவதை கண்கள் இமைக்காமல் பார்த்து ரசித்து கைகள் தட்டுகிறேன்.
பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீங்கள்தான்.
சிகரெட் இல்லாத ரஜினியையும் ரசிக்க முடியும் என்று சமீபத்திய படங்களில் நிரூபித்தீர்கள். சபாஷ்.
ஒன்று மட்டும் சொல்லுங்கள் ரஜினி. ஓடும் வேகத்தில் நடப்பதற்கு எங்கு பழகுநீர்கள்? உங்கள் சுறுசுறுப்பு சுட்டுப்போட்டாலும் யாருக்கும் வராது.
இமயமலை என்றதும் டென்சிங்கின் பெயரை விட உங்கள் பெயர்தான் எல்லோரது மனதிலும் எழுகிறது. உங்கள் பனிமலை பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.
என் உள்ளுணர்வு சொல்கிறது நிச்சயம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்று. ஆனால் நான் எதிர்ப்பார்த்து கிடப்பது உங்கள் அரசியல் பிரவேசத்தை அல்ல. ஆண்டுக்கு ஒரு படம். அவ்வளவுதான்.
பின் குறிப்பு:
அடுத்த முறை இமயமலை செல்லும் போது ஈ-மெயில் அனுப்புங்கள். நானும் வருகிறேன்.
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக