வெள்ளி, 9 ஏப்ரல், 2010

அறுபதுகளின் பாடல்

என் பெரும்பான்மையான இரவுகளில் உறக்கம் வரும்வரை பழைய பாடல்களைதான் கேட்டுக்கொண்டிருப்பேன். பதின் வயதுகளின் முடிவில்தான் பழைய பாடல்களின் மீதான ஈர்ப்பு அதிகமானது. அதிலும் குறிப்பாக டி.எம்.எஸ் குரலில் உண்டான மயக்கம் இன்று வரை தீரவேயில்லை. காதல் சோகம் பக்தி தத்துவம் இப்படி அவர் எதைப் பாடிக் கேட்டாலும் மனதை கரைப்பதாகவே உள்ளது. அதுப்போலவே பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா மற்றும் ஏ.எம்.ராஜாவின் பாடல்களும் வசீகரம் குறையாதவை. பழைய பாடல்களை தேடித் தேடி கேட்டுக்கொண்டிருந்த நாட்களில் என்னை பெரிதும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது அந்த பாடல்களின் எளிமையான இசையும் வரிகளும்தான். எனக்கு இசைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் சில நேரங்களில் இசை மிகத் தேவையானதாக உள்ளது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல்கள்தான் மனதில் தோன்றும் வெறுமையை நூறு சதவீத பூர்த்தி செய்கிறது. பிற இசையமைப்பாளர்களில் கே.வி. மகாதேவனும் வி. குமாரும் என் ரசனைக்குரியவர்கள். சில பாடல்களை எதற்காக திரும்பத் திரும்ப கேட்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. அப்படி கேட்கும் பாடல்களில் ஒன்றுதான் சர்வர் சுந்தரம் படத்தில் வரும் அவளுக்கென்ன அழகிய முகம்..!. அதை கேட்கையில் உடலில் என்னவோ செய்கிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதேயில்லை. எனக்கு மிகவும் விருப்பமான எம்.எஸ்.வி., கண்ணதாசன், டி.எம்.எஸ். மற்றும் நாகேஷ் ஆகிய நால்வரின் கூட்டணியில் அமைந்த அற்புதமான துள்ளிசை பாடல். எப்போது கேட்டாலும் மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் போல மனது துள்ளலும் உற்சாகமும் கொண்டுவிடுகிறது. எனது செல்போன் ரிங்டோனும் இந்தப் பாடல்தான்.


பழைய பாடல்கள் என்றில்லை பொதுவாக எந்தவொரு இசையாயிருந்தாலும் அதனுள் பிரவேசம் செய்வதற்கென்று ஒரு மனத்தருணம் வேண்டியிருக்கிறது. அது ஏற்பட்டாலொழிய என் அருகில் உலகின் சிறந்த இசை ஒலித்துக்கொண்டிருந்தாலும் அது என்னுள் செல்வதேயில்லை என்பதுதான் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக